Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மாவோயிஸ்ட் வன்முறை நேற்று 6 பேர் படுகொலை

மாவோயிஸ்ட் வன்முறை நேற்று 6 பேர் படுகொலை

மாவோயிஸ்ட் வன்முறை நேற்று 6 பேர் படுகொலை

மாவோயிஸ்ட் வன்முறை நேற்று 6 பேர் படுகொலை

ADDED : மார் 25, 2010 02:00 AM


Google News

புவனேஸ்வர் : ஒரிசா, பீகார் மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் நேற்றும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இங்கு நடந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில், பாதுகாப்பு படையினர் மூவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் கோபமடைந்துள்ள மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினருக்கு எதிராக முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் பீகாரில், ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை, குண்டு வைத்து கவிழ்த்தனர். ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தினர்.

அவர்களின் வன்முறை நேற்றும் தொடர்ந்தது. ஒரிசா, அம்பாஜரி வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக, நக்சல் ஒழிப்பு படை மற்றும் மாநில போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர், நேற்று அதிகாலை தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு மறைந்திருந்த ஏராளமான மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், பாதுகாப்பு படையினர் மூவர் கொல்லப்பட்டனர்; ஆறு பேர் காயமடைந்தனர். மாவோயிஸ்ட்கள் தரப்பில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து தகவல் இல்லை. அருகில் உள்ள மால்காங்கிரி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை, மாவோயிஸ்ட்கள் குண்டு வைத்து தகர்த்தனர்.

பீகார், கயா மாவட்டத்தில், சுங்க வரி வசூலிப்பு மையம் ஒன்று மீது, மாவோயிஸ்ட் கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில், பாதுகாவலர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினரின் ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகளையும், மூன்று லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்றிச் சென்றனர். மேற்கு வங்கம், மிட்னாபூர் மாவட்டத்தில், பசீர் கான் என்ற மார்க்சிஸ்ட் பிரமுகரை, மாவோயிஸ்ட்கள் கொலை செய்தனர். தொடரும் வன்முறை சம்பவங்களையடுத்து, பீகார், ஒரிசா, மேற்கு வங்க மாநிலங்களில், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us